சனி, மே 29, 2004

தமிழ் செம்மொழியாவதும் சில குரல்களும்

சில குரல்கள்

தமிழ் ஒரு செம்மொழியாக இத்தனை நாள் ஏன் ஆக்கப்படவில்லை என்று கவலைப்படாமல் இதை திராவிட இயக்கத்தின் பம்மாத்து என்று சிலர் பரிகசிப்பது வேதனையாக இருக்கிறது. மற்ற மொழியினர் பயப்படுவார்கள் என்ற சப்பைக்கட்டு வேறு. தமிழ் மொழி மற்ற மொழிகளை என்றும் ஒழிக்க முயற்சி செய்ததில்லை. ஆனால் இந்தியின் மூலம், இராஜஸ்தானி,பிகாரி போன்ற மொழிகள் ஒழிக்கப்பட்ட/படுகிற வரலாறுகளை நாடே அறியும். தமிழ் செம்மொழி என்பதை உத்திரப்பிரதேசத்தில் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். எதிர் கருத்தை இதுவரை நான் கேட்கவில்லை. என்னுடன் மலையாளிக்ள் வேலை செய்கிறார்கள், தெலுங்கர்கள் இருக்கிறார்கள், மராத்தி பேசுபவர்களும் இருக்கிறார்கள். திருக்குறளின் ஆங்கில மொழியாக்கத்தை என்னிடம் கேட்டுப் படிப்பவர்களும் உண்டு. யாரும் இதுவரை அதை ஒரு பிரச்சினையாகப் பேசவில்லை. இந்திக்காரர்கள் பயப்படாதபோது தம்ழ்நாட்டில் சிலபேருக்கு எங்கிருந்து பயம் முளைத்தது எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டிலிருந்து இப்படிக் குரல் கிளம்புவது வேதனை அளிக்கிறது. இந்தியை வளர்க்கும் பொருட்டு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை நாங்கள் எங்கள் அலுவலகத்தில் பார்த்து வருகிறோம். ஒரு தனிப்பட்ட மொழியை வளர்ப்பதற்கு ஒரு நாடு முழுவதிலும் திரட்டப்பட்ட வரிப்பணத்தைச் செலவு செய்வது குறித்துக் குரல் எழுப்ப யாருமில்லை. 'தமிழக அரசியலில் ஆளாளுக்கு இதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ' என்கிறார் பத்ரி. இது அரசியல்வாதிகளின் கோரிக்கை மட்டும் அல்ல. மக்களின் கோரிக்கை கூட. 'எது எப்படியிருந்தாலும் வரலாறு என்ன சொல்லும்? திமுக-க்கு நிறைய ஸீட் இருந்தது.. கழுத்துல கத்திய வெச்சி வாங்கிட்டானுவன்னு தானே?' என்கிறார் ஹரி. வரலாறு சொல்கிறதோ இல்லையோ, உங்களைப்போன்றவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருந் தார்கள், மேலும் இருப்பார்கள். இதுவொன்றும் புதிதில்லை. அது தமிழ் நாட்டின் தலையெழுத்து.
இதையெல்லாம் மீறித்தான் தமிழும் தமிழனும் வளர்ந்து வருகிறார்கள்
இதையும் படியுங்கள்

1 கருத்து:

  1. பெயரில்லா4:43 PM

    அண்மையில் சன் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் பார்த்தேன். மார்ச் 21 அன்று பள்ளிக்குழந்தைகளை வைத்து அரட்டை அரங்கம் நடந்தது.

    அதில் ஒரு மாணவி பேசுகிறாள்..நமது கல்வி முறை (அதாவது தமிழ்நாட்டுக் கல்வி முறை) சரியில்லையாம். நான்(அந்த மாணவி) கல்வி அமைச்சராக இருந்தால் இந்தியைக் கட்டாயம் பள்ளிகளில் படிக்க வைப்பேன் என்றாள். திரு.அப்துல் கலாம் இந்தி படித்ததால்தான் இன்று குடியரசுத் தலைவராக இருக்கிறார். நாங்களும் இந்திபடித்தால்ஒரு அப்துல்கலாம் இல்லை ஓராயிரம் அப்துல்கலாம்களாக நாங்கள் உருவாகுவோம் என்று உணர்ச்சி பொங்கப் பேசினாள். விசு மெய்ம்மறந்து கேட்டுப் புளங்காயிதம் அடைந்து உணர்ச்சி வசப்பட்டார்.
    பிஞ்சு மனங்களில் எப்படி எல்லாம் நஞ்சை கலந்து விடுகின்றார்கள் பார்த்தீர்களா?
    இந்தி தெரிந்தால் குடியரசுத் தலைவர் ஆகிவிடலாமாம். என்ன பம்பாத்து வாதம்? இந்தியாவில் இன்று எத்தனையோ கோடி மக்களுக்கு இந்தி தெரிந்துதானே இருக்கிறது? அத்தனை பேரும் திரு. அப்துல் கலாம் ஆகிவிட்டார்களா? சுரனை கெட்ட தமிழனுக்கு ஏன் புத்தி இப்படிப் போகுது? யாருக்காவது எந்த மொழியாவது படிக்க ஆசை இருந்தால் சுயமாகப்படித்துக்கொள்ளட்டும்! அனைவருக்கும் மேலும் ஒரு மொழியைக் கற்பிக்க வேண்டும், கற்க வேண்டும் என்று வலியுறுத்த என்ன உரிமை இவர்களுக்கு இருக்கிறது? அனைத்து மாணவர்களுக்கும் மொழிச்சுமை ஏற்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த இவர்கள் யார்?

    விசு மற்றும் சன் தொலைக்காட்சிக்கு ஒரு வேண்டுகோள்!

    மீண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி இளிச்சவாயன் தமிழன் காதில் முழம் முழமாகப் பூச்சுற்றும் வேலையைச் செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

    அக்னிப்புத்திரன்.

    பதிலளிநீக்கு